
தாலே லாலோ லாலேலோ
ஆலோ அருகோ அலர்நீயோ
சோலைக் குயிலின் சொல்லுனதோ
மேலாம் அழகுன் வேல்விழியோ
கண்ணில் நிறைந்த கண்மணியே
பண்ணின் இசையுன் பண்மொழியே
வண்ணத் தமிழால் வண்மைபெறக்
கண்கள் மூடிக் கண்ணயர்வாய்
அன்னை மொழியே அன்புருவே
என்னுள் நிறைந்த இன்னுயிரே
கன்னற் சொல்லே கனிமொழியே
இன்னே நீயும் இனிதுறங்கு
தேனே பாலே தேம்பாவே
ஊன்றிற் றுளத்தில் உன்நினைவே
கானின் அழகே கனியமிழ்தே
மானே உறங்கு வனப்புறவே!
———-
அர. செல்வமணி




