
ஓகாரயிடைச்சொல்.
ஒழியிசை, வினா, சிறப்பு (உயர்வு, இழிவு), எதிர்மறை, தெரிநிலை, கழிவு, பிரிநிலை, அசைநிலையென்னும் எண்வகைப்பொருளில் ஓகாரயிடைச்சொல் (ஓ) வரும். இவ்வரிசையில் எடுத்துக்காட்டுகள் வருமாறு.
• ‘வளவா கற்கவோ வந்தாய்.’ இத்தொடரில் கற்பது ஒழிந்த (கற்பதற்கன்று) விளையாடுவது உள்ளிட்ட செயல்களுக்காய் வந்தாயென பொருள்தருதலால் ஓகாரம் ஒழியிசை.
• ‘வந்தது கந்தனோ கண்ணனனோ.’ இத்தொடரில் வந்தது முருகனா கண்ணனாயென வினாப்பொருள்தருதலால் வினா.
• ‘ஓஓ பெரியன்.’ இத்தொடரில் ஒருவரது பெருமையாகிய உயர்வின் மிகுதியை விளக்குதலால் உயர்வுச்சிறப்பு. சிறப்பு = மிகுதி.
• ஓஓ கொடியன். இத்தொடரில் ஒருவரது கொடுமையாகிய இழிவின் மிகுதியை விளக்குதலால் இழிவுச்சிறப்பு. சிறப்பு = மிகுதி.
• ‘வளவனோ எடுத்தான்.’ இத்தொடர் ‘வளவன் எடுக்கவில்லை’ என்னும் பொருளைத்தருமிடத்து எதிர்மறை.
• ‘அது பாம்போ கயிறோ அன்று மரக்குச்சி.’ இத்தொடரில் இன்னதென தெரிவித்ததால் தெரிநிலை.
• ‘அய்யோ அறியாரோ.’ இத்தொடரில் ‘அறியாது போனரோ’ என்று கழிந்த செயலுக்காக இரங்குதலால் கழிவு.
• ‘இவனோ எடுத்தான்.’ இத்தொடரில் பலருள் ஒருவனைப்பிரித்து நிற்றலால் பிரிநிலை. இவ்வகை ஓகாரம் வழக்கில்லை.
• ‘காண வருவீரோ.’ இத்தொடரில் ஓகாரம் வேறுபொருளின்றி சார்ந்து நிற்றலால் அசைநிலை.
உரைநடையில் ஓகாரயிடைச்சொல்லினை வருமொழியொடு புணர்த்தாது பிரித்துநிறுத்துக. இடைச்சொற்கள் முதல்புணர்ச்சியுடன் தமது பணியை நிறைவுசெய்கின்றன.
தொடர்வோம்.
தொகுத்தெழுதியவர் : முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்கதமிழ்.




