“மூட்டை தூக்கி வந்தேன்” ; பா

மூட்டை தூக்கி வந்தேன்!
கனவுகளை மூட்டைக்கட்டித்
தூக்கிவந்த மூட்டை தூக்கி யான்!
என் பாட்டைக் கேளடா!
அழுக்கு மூட்டை சுமந்தபடி
வெள்ளாவி செல்கிறது இக் கழுதை! துணியழுக்கை யான் சுமப்பேன்..
உங்கள் மன அழுக்கை யார் சுமப்பார்?
மண்டியிலே முதுகு நோக..
மூட்டை சுமக்கும் தொழிலாளி..
மாடாக சுமந்தாலும் கடைசிவரைக் கடனாளி!
பிணிமூட்டை சுமப்பதற்கு
படைத்தவனோ யானல்லன்..
சுமைசுமந்து சோர்ந்திருக்கும்
எளிய மாந்தனே யான்..
தெளிந்த வெளித் தெருவினிலே
கானக்கருங்குயிலாய் யானுமொரு வழிபோக்கன்..
ஆனவரை சுமக்கின்ற மூட்டைதூக்கி!
குமுகாயச் சந்தையிலே
சரக்கேற்ற வந்தவன் நான்..
சாக்கு மூட்டைக்குள்
நேர்மைகளைச் சுமப்பவன் நான்!
மூட்டை தூக்கி வந்தேன்
முன்சுமந்தேன் இப்பிறப்பும்..
பாட்டைச் சுமந்து வந்து..
பாடு பட்டு உழைக்கவந்தேன்.!
நாளை இப் பாரங்களை
இறக்கி வைத்துப் போகயிலும்..
நாயகனை பார்த்து நாளும்
நற்கூலி கேட்பவன் நான்..!
தலைப்பு :”முட்டை தூக்கி வந்தேன்”
எழுதியவர்: வே . கல்யாண் குமார்
பெங்களூரு .





சிறப்பான பா, வாழ்த்து பாராட்டுகள்