
ஆராரோ !ஆரிராரோ!
நான் பாட நீ வேண்டும் என் தேனே!
தாலாட்டு நான் பாட தாயாகவில்லையடி,
சேயாக உன்னை நினைத்து
என்ன தான் பாடுவேனோ?..
ஈரைந்து திங்களும்
என் தூய்மையும் நிற்கவில்லை..
ஒரு கிழமையும் உன்னையும் நான் சுமக்காத பாவியடி…
ஆராரோ! ஆரிராரோ!
மனசுக்குள் நீ தான் பிள்ளை,
உன்னை நினைக்காத
நாளும் இல்லை..
உன்னை சுமக்கவில்லை,
உன் நினைவை சுமக்கிறேனடி…
ஆராரோ! ஆராரிரோ!
மூன்றாம் திங்களில் உன் நெஞ்சுத்துடிப்பை நான் கேட்கவில்லை…
ஆறாம் திங்களிலும் உன் செயலை
நான் உணரவில்லை…
ஆராரோ! ஆரிராரோ!
ஒன்பதாம் திங்களும் பெற்றெடுப்பது மறுபிறப்பாம்..!
நீ எனக்கு அப்பிறப்பு கொடுக்கவில்லை
என் கண்மணியே…
இப்பிறப்பே உனக்கு போதும் என்று நினைத்தாயோ !
இந்த பாவியின் வயிற்றினிலே நீ இருக்க மறுத்தாயோ!..
ஆராரோ! ஆரிரரோ!
உன்னை நினைத்து நினைத்து நடைசவமாய் வாழ்கிறேனடி…
குழந்தை அழும்
ஒலி கேட்டு
இந்த பாவி
மனம் தாங்கவில்லை..
கட்டி அணைத்துக் கொண்டு முத்தமிட நீயும் பக்கத்தில் இல்லையடி
என் பாவி மகளே..
நீயும் என்னை ஒதுக்கினாயா!
இல்லை
கடவுளும் உன்னை தர மனம் இரங்கவில்லையோ?
இப்பிறப்பு போதும் எனக்கு ,
என
இருவரும் தான் நினைத்தீரோ.
ஆராரோ ஆரிரரோ….
பாவலர்: யோசுந்தர்.




