போட்டி நிகழ்வு : பாக்களம்: தலைப்பு: ”எழடா தமிழா”
கடைசிநாள் : 13/04/2024
வாழ்க தமிழ் …
அனைவருக்கும் இனிய நற்றமிழ் வாழ்த்துரித்தாகட்டும் ..!
போட்டி எண்: ௪ (04)
“பாக்களம் “
நடுவர் பற்றிய தரவு :
பாவலர் கி.மணிவாசகன்.
இதுவரை மூன்று தொகுப்பு நூல்கள் மற்றும் *அன்னை மடியில்* என்ற தனி நூலின் ஆசிரியர் .கவிதைச் சாரல் சங்கத்தின் பொறுப்பாளர் .இருபத்து மூன்று விருதுகளைப் பெற்றவர் .ஏழு பாவரங்கில் பாவினைப் பாடியவர்.இரண்டாயிரம் பாக்களுக்கு மேல் எழுதியவர் மற்றும் 2022 ஆம் ஆண்டு *கலாமின் சுதேசிய அங்காடி மற்றும் பைந்தமிழ் இலக்கிய பேரவை* இணைந்து நடத்திய ( துளிப்பா) ஹைக்கூ பா போட்டியில் முதல் பரிசு பெற்றவர் .
போட்டியாளர்களுக்கான முக்கிய குறிப்பு :
- வெற்றியாளராக ஒருவரே தேர்ந்தெடுக்கப்படுவார் . சிறந்த பாவலர்களுக்கு பங்கு பற்றியமைக்கான சான்றிதழ் வழங்கப்படும் .
- மீனத்திங்கள் ௩௧ (31)ஆம் நாள் , காரிக்கிழமை வரை பாக்களை அனுப்பி வைக்கலாம் .பொது நாள்காட்டி ( 13/04/2024).
- உங்கள் படைப்பை அனுப்பிவைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி : thulipotti@gmail.com
- உங்கள் பெயர் , முகவரி , அழைப்பெண் போன்றவற்றைப் பிழையில்லாமல் குறிப்பிட வேண்டும் . சான்றிதழில் நீங்கள் அனுப்பும் பெயரே பதிவிடப்படும் .
பாவின் தலைப்பு : “எழடா தமிழா”
போட்டியிடும் படைப்பாளர்களுக்கான முக்கிய வரையறைகள் .
௧ ) உங்கள் புலமையால் படைக்கப்பட்ட படைப்பாக இருத்தல் வேண்டும்.
௨ ) தனித்தமிழில் இருத்தல் வேண்டும்.( பிறமொழிக் கலப்பற்ற படைப்பு )
௩ ) பொருள் சிதைவுறாமல் இருத்தல் வேண்டும்.
௪ ) ஒற்றெழுத்துகள் , சேர்த்தல் , பிரித்தல் போன்றன பிழையற இருத்தல் வேண்டும்.
௫ ) நீங்கள் படைக்கும் பாக்கள் அடியெதுகையாகவும் பொழிப்பு மோனை வரும்படி படைக்க வேண்டும். (அடிதோறும் இரண்டாம் எழுத்து ஒன்றிவருதல் அடியெதுகை. அடிதோறும் முதல் சீரின் (சொல்லின் ) முதலெழுத்தும் மூன்றாம் சீரின் ( சொல்லின்) முதலெழுத்தும் ஒன்றி வருதல் பொழிப்பு மோனை ஆகும்.)
௬ ) முதல் அடியில் நான்கு சீர்கள்(சொற்கள் ), இரண்டாம் அடியில் மூன்று சீர்கள்(சொற்கள்), மொத்தமாக இருபத்து எட்டு அடிகளில் தொன்னூற்று எட்டு சீர்கள் (சொற்கள்) அடங்களாக இருத்தல் வேண்டும் . ( ஏழு கண்ணிகளாக இருப்பின் சிறப்பு )
௭ ) எழுச்சியூட்டும் படைப்பாக இருத்தல் வேண்டும்.
௮ ) வேற்றுமொழியையோ இனத்தையோ ஒப்பீடு செய்யாமல் எழுதல் வேண்டும் .
௯ ) தட்டச்சு செய்து அனுப்பல் வேண்டும் .
௰ ) நாளைய குமுகாயத்திற்கு கையளிக்கும் சிறப்பான படைப்பாக இருத்தல் வேண்டும்.
௰௧ ) கொடுக்கப்பட்டிருக்கும் வரையறைகளை மீறக்கூடாது . எவ்வகைப் பாவாக இருப்பினும் , தலைப்பில் இதுவென எழுதக்கூடாது . உங்கள் படைப்பு எதைச் சார்ந்த படைப்பென்பதை நடுவர் ஆய்வு செய்து அதற்கான புள்ளிகள் வழங்குவார் .
போட்டியிட காத்திருக்கும் பாவர்களுக்கு எங்களது நிறைவான வாழ்த்தை உரித்தாக்கி மகிழ்கின்றோம் .
“துளிவானொலி / தமிழே எங்கள் முகவரி “பாக்கள ஒருங்கமைப்புக் குழு .
நன்றி .
வாழ்க தமிழ் ..!




