போட்டி எண் :௬(06) பாக்களம் தலைப்பு : “கல்வி”
பாவெழுதி அனுப்புவதற்கான கடைசிநாள்: 31/05/2024

போட்டி எண் :௬(06):பாக்களம் தலைப்பு : “கல்வி”
போட்டியாளர்களுக்கான முதன்மைக்குறிப்பு :
1.வெற்றியாளராக ஒருவரே தேர்ந்தெடுக்கப்படுவார் . சிறந்த பாவலர்களுக்கு போட்டியில் பங்கு பற்றியமைக்கான சான்றிதழ் வழங்கப்படும் .
2. விடைத்திங்கள் ௩௧ (31)ஆம் நாள் , வெள்ளிக்கிழமை வரை பாக்களை அனுப்பி வைக்கலாம் . (31/05/2024)
3. உங்கள் படைப்பை அனுப்பிவைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி : thulipotti@gmail.com
4.உங்கள் பெயர் , முகவரி , அழைப்பெண் போன்றவற்றைப் பிழையில்லாமல் குறிப்பிட வேண்டும் . சான்றிதழில் நீங்கள் அனுப்பும் பெயரே பதிவிடப்படும் .
5.உங்கள் புலமையால் படைக்கப்பட்ட படைப்பாக இருத்தல் வேண்டும்.
6. தனித்தமிழில் இருத்தல் வேண்டும்.( பிறமொழிக் கலப்பற்ற படைப்பு ).
6.படைப்பைத் தட்டச்சு செய்து அனுப்பல் வேண்டும்.
நடுவர் விளக்கம்
நேரிசை ஆசிரியப்பா
வணக்கம் பாவலர்களே ..
உங்களின் விருப்பத்திற்குரிய மரபுப்பா பயிற்சி இந்தக் கிழமை ஆசிரியப்பா ஆகும். எளிய முறையில் எழுதலாம். சங்ககாலப் பாடல்களில் பெரும்பாலானவை ஆசிரியப்பாக்களே.
சீர்கள் ஈரசைச்சீர்களும் காய்ச்சீர்கள் மட்டுமே இருத்தல் வேண்டும் .
ஈரசைச் சீர்கள் நான்கு வகைப்படும்
அவையாவன:
1. தேமா
2. புளிமா
3. கூவிளம்
4. கருவிளம்
காய்ச்சீர்களும் நான்கு வகைப்படும்
அவையாவன:
1. தேமாங்காய்
2. புளிமாங்காய்
3. கூவிளங்காய்
4. கருவிளங்காய்
அசைகள்
நேர்
குறில் – க
குறில்ஒற்று – கண்
நெடில் – கா
நெடில் ஒற்று – காண்
எனவும்
நிரை
இரு குறில் – கட
இரு குறில் ஒற்று – கடன்
குறில் நெடில் – தடா
குறில் நெடில் ஒற்று – தடால்
எனவும் வரும்
வாய்பாடு
தேமா நேர்நேர் – காலை காண்க கண்கள்
புளிமா நிரைநேர் – வருக வளைத்து தருக
கூவிளம் நேர் நிரை – வாழிடம் கூவிடும்
கருவிளம் நிரைநிரை- கருவிழி நிறைமலர்
தேமாங்காய்
நேர்நேர்நேர் -வா வா வா / வான்மீனே
புளிமாங்காய்
நிரைநேர்நேர் – அருகேவா /அயல்நாடு
கூவிளங்காய்
நேர் நிரை நேர் -மாவிலைகள் /நானறிவேன்
கருவிளங்காய்
நிரை நிரை நேர் – மலரினங்கள் / நறுமணங்கள்
காய்ச்சீர்களில் தேமாங்காய்
புளிமாங்காய் வருதல் சிறப்பு
நேரிசை ஆசிரியப்பா
பா புனைய உதவும் வகையில் ஓர் எடுத்துக்காட்டுப்பா .
தலைப்பு:கல்வி
உலகில் என்றும் உன்னை உயர்த்தி/
கலகம் நீக்கிக் கல்வியே காக்கும்/
திருடவும் முடியா திருவாம் கல்வி/
கருகிப் போகா கணக்கே கல்வி/
பெருகும் நற்குணம் பெருமை/
முருகுத் தமிழால் முந்தி உயர்வாயே/
வரைமுறைகள்
1.அடிக்கு நான்கு சீர்.
2.ஈரசைச் சீர்கள் மட்டும். காய்ச்சீரும் வரலாம்.
3.இறுதி அடிக்கு முந்தைய அடியில் மட்டும் மூன்று சீர்.
4.இறுதி அடியில் நான்காவது சீர் ஏகாரத்தில் முடிந்தால் சிறப்பு.
5.ஓ,என்,ஈ,ஆய்,ஐ எனவும் முடியலாம்.
6.இரண்டடிக்கு ஒரே எதுகை வரவேண்டும்.
7. ஒவ்வொரு அடியிலும் முதல் மற்றும் மூன்றாம் சொல்லில் மோனை வரவேண்டும்.
8 . ஆறு அடிகளில்( வரிகள்) எழுதவும்.
“கல்வி” என்ற தலைப்பில் ஆறு அடிகளில் ஒவ்வொருவரும் ஒரு நேரிசை ஆசிரியப்பா எழுதுங்கள். வெற்றியாளர் தேர்வானபின் அனைவரின் படைப்புகளும் துளியின் இணையத்தளம் மற்றும் எமது குமுகாய வலைத்தளங்கள் அனைத்திலும் பகிரப்படும் .
“பா” புனையக் காத்திருக்கும் பாவலர்கள் அனைவர்க்கும் நல் வாழ்த்தை உரித்தாக்குகின்றோம்.
நன்றி.
வாழ்க தமிழ் ..!
ஒருங்கமைப்பு: துளிவானொலி /தமிழே எங்கள் முகவரி




